கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் மனைவியிடம் ரூ10 லட்சம் மோசடி கொலை மிரட்டல் போலீசில் புகார்


கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் மனைவியிடம் ரூ10 லட்சம் மோசடி கொலை மிரட்டல் போலீசில் புகார்


ஆக்ரா: இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர், அவரது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஜெயா பரத்வாஜ் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். அவர் விளம்பர நிறுவனத்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், தீபக் சாஹரின் தந்தை லோகேந்திர சாஹர் நேற்று(பிப்.2), பாரிக் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் துருவ் பாரிக் மற்றும் அவரது தந்தையும், ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் மேலாளருமான கமலேஷ் பாரிக் மீது போலீசில் புகார் அளித்தார்.

அதில், "பாரிக் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், ஜெயா பரத்வாஜ் உடன் 10 லட்சம் ரூபாய்க்கு ஷூ விற்பனை தொடர்பான ஒப்பந்தம் மேற்கொண்டனர். ஆனால், வேலை முடிந்த பிறகு ஒப்பந்தப்படி ஜெயா பரத்வாஜுக்கு பணத்தை வழங்கவில்லை. இது தொடர்பாக ஜெயா அவர்களை தொடர்பு கொண்டுகேட்டபோது, இருவரும் பணத்தை கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்தனர். அதனால் துருவ் பாரிக், கமலேஷ் பாரிக் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவிடம், அவரது முன்னாள் நண்பர் 44 லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

Comments